Pages

Friday, February 24, 2023

நல்லாச்சி - 50


அன்னையின் செல்வமா 
நீ தந்தையின் செல்லமா
அம்மையா அப்பனா
உன் விருப்பம் யாரோ
பல்லாண்டுகளாய் குழவிகளிடம்
வைக்கப்படும் கடுவினா
பேத்தியின் முன்னும் 
வைக்கப்பட்டது அன்றைய தினம்
சேவை செய்தே பொழுது கழித்து
உளம் களிக்கும் 
நானே அவள் தேர்வு
என்கிறாள் அன்னை
விரும்புவனவெல்லாம் காலடியில் கொட்டும்
பெரும்பக்தன் என்னையே 
தேர்வாள் என் தெய்வம்
என்கிறான் அப்பன்
திருவுளச்சீட்டு தேர்ந்த முடிவை
எதிர்நோக்குவதுபோல்
பேத்தியின் திருவாய்மொழிக்காய் 
ஆவலுடன் ஊரார் காத்திருக்க
நல்லாச்சியைச் சுட்டுகிறாள் அவள்
அன்னையும் அப்பனும்
பேசும் தெய்வங்கள்
அணைத்தலும் இலைமறைகாயாய் சினத்தலும் 
அவ்வியல்பே சிறுகோடாய் இடைநிற்பதும்
தேர்வுக்குத் தடை நிற்கிறதாம்
நல்லாசிரியையாய் பக்தையாய்
அடைக்கலம் தரும் மடியாய்
மனம் திறக்கும் சாவியாய்
யாவரிலும் மேலான களித்தோழியாய்
ஏதும் எதிர்பாரா பெருவுள்ளத்தாளாய்
அன்னையிலும் மேலான பேரன்னை 
அவளே என் தேர்வு என்கிறாள் பேத்தி
நெக்குருகி நிற்கிறாள் மூதன்னை.