Pages

Wednesday, December 29, 2010

வரவறிவித்தல்.

விருந்தினர் வரவை
கரைந்தறிவிக்கும் காக்கை
தானே ஒரு
விருந்தினரானது;
அப்பாவின் திதியன்று..
*************************
எந்தவொரு
இசைக்கருவியையும்விட
இனிமையாகவே ஒலிக்கிறது,
'அம்மா' என்ற
மழலைச்சொல்...

*****************************

நிரம்பியபடியே இருக்கிறது
ஒவ்வொரு துளிகளாய்
என்றாலும்;
சொந்தமில்லாதவற்றை
உமிழ்ந்துவிடும்
கடலாய்,
ஒதுக்கியபடியே இருக்கிறது மனம்,
ஒவ்வொன்றாக.. கசடெனக்கருதி;
சஞ்சலங்களையும் தடுமாற்றங்களையும்.
சோதனைகளை
உரமாய்க்கொண்டு
உருவாகின்றன நம்பிக்கைகள்..
சிப்பிக்குள் முத்தென.






Friday, December 17, 2010

விடிந்த நம்பிக்கை...



ஒவ்வொரு தினமும்
புது நம்பிக்கையொன்றை
தன்னுடனேயே சுமந்து வரும்
ஒவ்வொரு விடியலும்!.

உதயமாகியிருப்பது
புது விடியலா;
புது தினமா;
இல்லை,.. புது வாழ்வா??
என்ற மயக்கங்களுடன்
தயக்கங்களையும் கட்டறுத்து;
தன்னைத்தானே செதுக்கிக்கொண்டிருக்கும்
அந்தக்கல்லினுள்ளே..
இருப்பது மூர்த்தமா, வேறொன்றாவென்று
அறியும் ஆவலில்,
நின்று கவனித்துப்போகின்றன;
நம்பிக்கையும் விடியலும்.

கவிந்த துயரமேகங்களை
விரட்டிச்சிரிக்கும்
புன்னகைச்சூரியனின் வெதுவெதுப்பில்,..
ரோஜாக்களாய் மலர்ந்த முட்களின் வாசத்தில்
கிறங்கிவிழுகிறது
ஒரு பனித்துளி..





Monday, December 13, 2010

வெறிச்சோடிய முற்றம்...

முற்றத்துத்தூணில் சாய்ந்துகொண்டுதான்
கீரை ஆய்வாள்,
பொன்னம்மாச்சி..
வெயில் காயும் நெல்லில் சிறிதில்
பசியாறும் புறாவுக்கு,
முற்றத்து தொட்டியில்
தண்ணீரும் கிடைக்கும்.. அவள் புண்ணியத்தில்.
அவளமைத்த
கலயவீடுகளில்
நிம்மதியாய் குடும்பம் நடத்துகிறது குருவி
நன்றி சொல்லியபடி..
பேச்சும் சிரிப்புமென
தோழிகளில் ஒருவராகிப்போன
அந்த முற்றத்தில்தான்
பொரணியும் ஆவலாதியும்
சேர்ந்தரைபடும் அரிசியுடன்..
கானகமும் இல்லமுமாய்
அனைவரும் போய்ச்சேர்ந்தபின்..
வெயிலாடிக்கொண்டிருக்கிறது
துவைத்த கல்லும், வளர்த்த முருங்கையும்;
காலியான முற்றத்தில்...


டிஸ்கி:  வெளியிட்ட வார்ப்புக்கு நன்றி..









Friday, December 10, 2010

எழுதிச்செல்லும்..


நூலறுந்த பட்டமாய்
உயரப்பறக்கும் கற்பனைகளுடன்
எழுதிச்செல்கிறது
கவிதையொன்று.. தன்னைத்தானே;
ஊர்ந்து செல்லும் எழுத்தெறும்புகள் ..
சுமந்து செல்லும்,
கொஞ்சம் கனவுகளையும்
ஓய்வெடுத்துச்செல்லும்
சில வண்ணத்துப்பூச்சிகளையும்..
ஒருசில நெருப்பூக்களையும்.
சிலசமயங்களில்
கவிதைகளாகவே இருக்கின்றன;
போகிறபோக்கில் குழந்தை
சிந்திச்செல்லும் புன்னகைகளும் ..
அள்ளிச்சேர்த்தபின்னும்
மீதமிருக்கும்
மழைமுத்துக்களாய்..
பிரபஞ்சமெங்கும்
நிரம்பிச்சொரிந்துகொண்டே
இருக்கின்றன கவிதைகள்..



Wednesday, December 8, 2010

விஷவிருட்சம்...


கூரையில் விழுந்த
சிறுபொறியொன்று,
விழுங்கிடத்துடிக்கும் பெருநெருப்பாகி,
தீவிரவாதமென்ற பேர்கொண்டதுவோ??
புரையோடிப்போனதை
பூச்சிட்டு அழிக்காமல்,
எம்மக்கள் வாளாவிருப்பதுவோ!!
சோதரர்களிடையே
பிரிவினை கண்டு
துடித்திடாத தாய்,
இன்னும் பிறந்திடவில்லை.
குறைவிலா வேதனைகள்
சுமந்துதிரியும்,.. ஒவ்வொரு மனங்களிலும்,
வாழ்வே சுமையாகிப்போன
ரணமொன்றுண்டு, உதிரம் கசிந்தபடி..
வேருடன் கல்லாது 
செந்நீரூற்றி வளர்த்த விஷ விருட்சத்தில், 
கிளைத்துக்கனிந்து காத்திருக்கிறான்
சாத்தானொருவன்
மனிதனென்றழைத்துக்கொள்பவர்களால்
புசிக்கப்படவென..
ஆயுதமாய் மனிதனே மாறிப்போனபின்
தக்கவைத்துக்கொள்வோம்
மனிதத்தை.... 
அழியும்முன்.
காட்சிப்படுத்திடவென்றல்லாமல்
சுவாசமாய்.. உயிர்மூச்சாய்!!.






Monday, December 6, 2010

மகிழ்வின் நிறம்..


எந்தவொரு
புதினத்தையும்விட
சுவாரஸ்யமாகவேயிருக்கிறது;
ஜன்னல்களினூடே விரியும்
யாருமற்ற ஏகாந்தவெளியில்,
ஒன்றையொன்று துரத்தும்
ஜோடி மைனாக்களின்
கொஞ்சல்களுடன் கூடிய சிறகடிப்பும்,..
காற்றில் வழிந்துவரும்
ஒரு
புல்லாங்குழலென
மழலையின் நகைப்பும்...
வானுக்கும் பூமிக்குமான நீர்ப்பந்தலில்
உற்சாகப்பூங்கொத்துடன்
மகிழ்வானதோர் உலகத்தை அறிமுகம் செய்து,
சில்லென்று குளிர்வித்துப்
போகிறபோக்கில்
வானவில்லில்
இன்னொரு நிறத்தையும் செருகி
மற்றொரு அற்புதத்தையும்
தெளித்துப்போகிறது மழை...

டிஸ்கி:  வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.


Wednesday, December 1, 2010

ஓயாதகடலொன்று...

வீட்டை நிறைக்கும்
மழலைப்புன்னகையென
சிதறிக்கிடக்கும் சிப்பிகளினூடே,
கண்ணாமூச்சியாடும் குழந்தைகளாய் 
ஓடிச்சென்று மறைகின்றன 
கொழுத்த நண்டுகள்..
ஆதரவான தகப்பனைப்போல் 
கேசம் கலைத்துச்செல்லும் காற்று;
கொண்டு வந்து சேர்க்கிறது 
கடலின் வாசத்தை..
இன்னொரு நாளை 
முடித்த நிறைவில்
 நாள் முழுதும் உழைத்த களைப்பில்;
மறைந்த ஆதவன்,
உதிக்கிறான் ஒரு குழந்தையின் கையில்
பலூனாய்..
வீடு வந்து சேர்ந்தபின்னும் 
அலையடித்துக்கொண்டிருக்கிறது 
கடல்,
உடையிலிருந்து உதிரும்
குறுமணலுடன்..
கால் நனைக்கவென்று மட்டுமல்லாமல்
எல்லாவற்றுக்குமான விருப்பமாய்...

இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி...



Wednesday, November 24, 2010

தீர்வும், தெளிவும்..

சிக்கித்தவிக்கும் நினைவுகள்
மனதின் இடுக்குகளில்,
பிய்த்தெறியமுடியா சிடுக்குகளாய்;
எங்கோ ஓர் ஓரத்தில் ஒட்டிக்கொண்டு.

இனம்புரியா சஞ்சலங்கள்,
விடாது பின்வரும் நிழலைப்போல்
கேள்விகள்,
துரத்திக்கொண்டிருக்கும்;
இன்னவென்று புரிபடாத பதில்களை..

புரிந்துகொள்வதற்கும்
புரியவைப்பதற்குமான இடைவெளியில்,
நூலாம்படையுடன் காலம்..
விழுங்கக்காத்திருக்கும் வாய்பிளந்த சிலந்தியென.

கனவுக்கும் நனவுக்குமான போராட்டத்தில்
கனவில் கிடைத்த தீர்வில்,
கழுவி விடப்பட்ட வானமாய்
மனம்..

டிஸ்கி: இந்தக்கவிதை திண்ணையில் வெளிவந்துள்ளது.. 




Friday, November 19, 2010

ஒளிமழையில்...

மழையாய்ப்பொழியும்
நட்சத்திரங்கள்...
இருகரம் நீட்டி ஏந்தணும்;
ஊற்றுக்கண் திறந்த நெருப்பூற்றின்..
ஆரவாரத்தில் மகிழணும்..
காதுவலிக்க வெடிக்கவில்லை,
கந்தகப்புகை உண்டென்றாலும்;..
கவனமாய்க்கொஞ்சம் இருக்கணும்.

மூணாம் மாடியில் பாய்ந்ததினால்
மறுக்கப்பட்டது
ராக்கெட்டேயன்றி,..
எங்கள் மகிழ்ச்சியல்ல;
சிறுபொறியில்தான் ஆரம்பிக்கிறது
எந்தவொரு ஆர்ப்பரிப்பும்..

சூழலைமட்டும் கவனித்து
பட்டாசாய் வெடிக்கும் கனவான்களே..
எங்களையும்
ஒரு நிமிடம் நினையுங்களேன்.
காணாமற்போய்க்கொண்டிருக்கின்றன,
ஒவ்வொரு சந்தோஷமாய்;
எங்களுக்கான உலகத்திலிருந்து
பாம்புமாத்திரையாய்..

நாளைய கவலையில்
இன்றை மறந்திடாமல்,..
ஒளிமழையில் நனைந்திடவே,
நானும்தான் வாரேன்..
ஆட்டத்தில் என்னையும் சேர்த்துக்கோ...





Thursday, November 18, 2010

இன்னுமொரு தினமல்ல..(கவிதைப்போட்டி)


அல்லன கண்டால் விலகிட வேண்டும்..
அன்னை பூமியை காத்திடல் வேண்டும்..
தேனீபோல் உழைத்திட வேண்டும்..
ஒற்றுமையும் இங்கு வளர்த்திட வேண்டும்..


மூடமை கண்டு எதிர்த்திட வேண்டும்..
முதுமையை என்றும் மதித்திட வேண்டும்..
இளமையில் கல்வி கற்றிட வேண்டும்..
எளியோருக்கு இரங்கிடல் வேண்டும்..


வேற்றுமையிங்கே களைந்திடல் வேண்டும்..
பிரிவினை செய்தால் பொங்குதல் வேண்டும்..
பெற்றவர்தன்னை பேணிடல் வேண்டும்..
சோதரமிங்கே வளர்ந்திடல் வேண்டும்..


மனிதத்தையும் கூட வளர்த்திட வேண்டும்..
பதர்களை வேருடன் ஒழித்திடல் வேண்டும்..
ஆணிவேராய் நாங்களிருக்க;
ஆலமரமாய் நீவிர் வளர்வீர்..


நாளைய உலகின் நாற்றங்கால்களே..
வாழ்த்துச்சொல்லி முடிப்பதல்ல..
வாழவைப்பதில் தொடங்கும் இத்தினம்..
பூத்துச்செழிப்பீர் அனுதினம்..

டிஸ்கி: இது பாரத்.. பாரதி நடத்திய கவிதைப்போட்டிக்காக எழுதினது :-))

Tuesday, November 16, 2010

பதிலைத்தேடும் கேள்விகள்...

உன்னிடமிருந்து
கற்றதும் பெற்றதும் ஏராளமாயிருப்பினும்,
இழந்துமிருக்கிறோம்..
விலைமதிப்பற்ற பொழுதுகளை;

நீ,.. வேலை நிறுத்தம் செய்தால்தான்
சிலவீடுகளில்
அடுப்பே எரிகிறதென்றபோதிலும்;
என்னருமை தோழமையே!!
பல வயிறுகளுக்கு,
நீயே அட்சயபாத்திரமாவும் விளங்குகின்றாய்..

நட்பாய் நுழைந்து..
உறவாய் மாறி..
இன்று,
உரிமையாளனாய் உருவெடுத்தபோதிலும்;
கோலுக்கு வசப்பட்ட குரங்காய்
சபித்தும், சகித்தும்
வாழப்பழகினோமேயன்றி...
ஒற்றைச்சுட்டுவிரல்
நீட்டியதில்லை.. உனை நோக்கி!!

அறிவுரைகள் பல பகன்றாலும்
அபத்தங்களையும் சேர்த்தே..
நீ,.. சந்தைப்படுத்தும்போது..
ஆற்றாமைதாளாமல்,
என்னருமை தொலைக்காட்சியே!!
உனை நோக்கி
விரல் நீட்டுகிறேன்;
ரிமோட் சகிதம்...
உனை ஆற்றுப்படுத்த..

செங்கோலை
எங்களிடம் பறிகொடுத்தபின்னும்,
எப்பொழுதிலும்
கவிழ நேரும் கூட்டணியாட்சியாய்..
பரிபாலனம் செய்யும் இம்சையரசரே....
நீவிர்,
நல்லவரா!!!... கெட்டவரா!!!..



டிஸ்கி:  இந்தக்கவிதை இந்தவார திண்ணையில் வெளிவந்துள்ளது.
அப்புறம், இது எனது 25-ஆவது கவிதை.


Wednesday, October 6, 2010

அய்யோ..அய்யோ..அய்யோ....

கமலி வளர்த்த ஞமலி
ஓடிப்போயிற்றன்றொருகாலை;
சோறூட்டிப்பாராட்டினேனே
பிள்ளையைப்போல்
என்றவளரற்ற...
'சோறுதான் வெச்சியா??' என்றதற்கு
பாலும்சோறும் பதமாய்
வைத்தேன் தினமுமென்றாள்..

'வாலைப்போலவே நாவும் நீளமாயிற்றேயதற்கு!!
அமிர்தமேயாயினும்
அனுதினமும் உண்ணக்கூடுமோ??'
என்றதற்கு;..
'ஹி..ஹி..ஹி..' என்றவள்வழிய,
என் பதில் என்னவென்று,.. சொல்லவும் வேண்டுமோ!!!!!



Friday, September 24, 2010

நிலவும், அவனும்..அவளும்..



நிலவில் தண்ணீர் இருக்கிறதாம்
விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.
நிலவைப்பெண்ணென்று
யார் சொன்னது!!
அதுவும் ஆணாகத்தான்
இருக்க வேண்டும்.
'ஜொள்ளு வடிக்கிறதே!!
உனைப்பார்த்து'
என்றான் அவன்.

இல்லையில்லை;
அதுவும் என் போல் பெண்தான்;
சொந்தமாய் ஒளிவீச
திறனில்லாமல்,
சூரியக்கணவனை
சார்ந்திருக்க வேண்டியிருக்கும் பச்சாதாபத்தால்,
வடித்த கண்ணீர்தான் அது,
என்றாள் அவள்:

வாதம் வலுப்பதை பார்த்துக்கொண்டே;
இருவருக்கும் சாட்சியாய்,
மேகமுக்காட்டுக்குள்,
நகைத்தது, பால் நிலா...


டிஸ்கி: 'அன்புடன் மலிக்கா' அவங்க தளத்தில் நடத்திய கவிதைப்போட்டியில், எழுதியது இது :-)). நான் ரொம்பவே சுறுசுறுப்பு..போட்டி நடந்துமுடிஞ்சு மாசக்கணக்காவுது. இப்பத்தான் வெளியிடுறேன். எல்லாம் ஒரு கணக்குக்காகத்தான் :-)))))




Monday, September 20, 2010

உனக்கென்ன பிடிக்கும்??

மணாளனுக்கும், மக்கட்க்கும்
மதிப்பிற்குரிய மூத்தோருக்கும்
அவரவர் விருப்பத்தை
பரிமாறிய அன்னபூரணிக்கு
தன்விருப்பம் மறந்ததே நினைவில்லை..


திருப்தியான முகங்களிலேயே
சாபல்யமடைந்துவிடும் அவளிடம்;
யாரேனும் கேட்டிருக்கக்கூடுமோ
அவள் எதிர்பார்ப்பு என்னவென்று?


விசாரிப்புகளுக்கப்பாற்பட்டாலும்
ஏங்கியிருக்கக்கூடுமோ
மனத்தின்மூலையில் தவித்துக்கொண்டிருக்கும்
அந்தச்சிறுகுழந்தை..!!


கொள்ளாமல் நிரம்பிவழிந்தபோதிலும்,
என்றென்றும்
பாத்திரம் அறிந்ததில்லை
பதார்த்தத்தின் ருசி!!








Thursday, September 9, 2010

நகரமென்னும்...

அனுமதி கிடைத்ததும்
புற்றீசலாய் கிளம்பும் வாகனங்களினூடே
ஒரு கணம் தடுமாறி,
பின், தாமுமொரு ஈசலாய் பறந்ததுண்டா!!!

வழிப்பாதையில்,
அரை மில்லிமீட்டர் புன்னகையை..
தினம் பரிசளிக்கும் வேற்றுமுகத்தை;
அண்டை வீட்டினராய்
கண்டுபிடித்ததுண்டா!!!

துளசியும் மல்லிகையும்
தம் குணம் மாறி,
ஏதோவொரு மணத்தில்
தம்மிருப்பை தெரிவித்ததுண்டா!!!

விட்டு வந்த
வயலும் வீடும்;
குளமும்,...குயில் கூவும் தோப்பும்,
கனவுகளாய் இம்சிப்பதுவும்;
உதயங்களைக்காணும் ஆவல்
விடிந்து.. மறைவதுவும்,
செக்கிட்ட எள்ளாய் உள்ளம்,
திணறித்தெளிவதுவும்;
களிக்கவும், கழிக்கவுமான
பண்டிகைப்பொழுதுகளை
வரவேற்பறை அரக்கன் கொண்டு செல்வதுவுமான...

ஏதேனும் ஒன்றை அனுபவித்திருந்தால்
உரக்கச்சொல்லுங்கள்;
நகரம், உங்களோடும் கை குலுக்கியிருக்கிறது.


Wednesday, August 25, 2010

கணக்குகள் தப்பலாம்....

விட்டுவிட்டு வந்தபின்னும்
வாசலில்
வந்து நிற்கும்
நாய்க்குட்டியாய்;

சென்று நிற்கிறான்
வாழ்ந்துகெட்டவன்,
தனதாய் இருந்த வீட்டில்;
தினம்,
கனவில்.

*************************

தொடங்கிய புள்ளியிலேயே
நிற்கிறது காலம்:

அழித்தழித்து
எழுதியபின்னும்
சரியாகவே தெரிகின்றன
தப்பாய்ப்போன மனக்கணக்குகள்;

இருளிலும், ஒளியிலும்
பறந்து திரிந்த விடைகளை
இனம்கண்டு சேமித்தபின்;
களைப்பு
சொட்டும்போதுதான்
தெரிகிறது:

தொடங்கியபுள்ளியிலேயே
நிற்கிறது காலம்.


Wednesday, August 18, 2010

முடிவற்ற போராட்டம்...


தூக்கம் தொலைத்த நள்ளிரவின்
நிசப்தமான பின்னணியில்..
அடங்கியெழும் மனஅலைகளில்
மிதந்து சென்றன;
நட்சத்திரங்களின் கிசுகிசுப்புகள்.

இரவின் மௌனங்களுடன்
போட்டி போட்டுக்கொண்டு,
இரைச்சலிட்ட மனதிலிருந்து
வழிந்தோடிய நதி
சங்கமமான கடலின் இடத்தில்,
ஒரு மடியை
நினைத்துப்பார்க்கிறேன்.

கிசுகிசுப்புகள்
இரைச்சலாக கூடியிருக்கும்போது
வெளுத்துக்கொண்டிருக்கிறது வானம்;
ஜன்னலுக்கு வெளியே...



Friday, June 25, 2010

ஒரு சாகசப்பயணம்...


(நன்றி:கூகிள்)

அவசரமாய்ப்போட்ட ஒப்பனையை
ஆங்காரமாய் கலைத்துவிட்டு
ஒன்றுமறியாததுபோல்
சிரித்துக்கொண்டிருக்கிறது மழை;

வேஷம் கலைந்த கோபத்தை
கையாலாகாத்தனமாய் வெளிப்படுத்தி
இளித்துக்கொண்டிருக்கிறது சாலை;
தேங்கிப்போன நினைவுகளுடன்
அடுத்த ஒப்பனையை எதிர்நோக்கி...

சுமையை இறக்கிவைக்கும்
இலக்கு தேடி..
விரைந்துசெல்கின்றன
மடிகனத்த மேகங்கள்;
பெருமூச்சு விட்டுக்கொண்டு...

விழுந்து எழுந்து,
விழுப்புண் பெற்று,
பூகம்ப பயணத்தின் இலவச இணைப்பாய்
முதுகுவலி வாங்கி,
யமதர்மனின் நிமிட தரிசனம்பெற்று,
அடுத்த நாளுக்கான நீட்டிப்புக்கு
உத்தரவாதம் பெற்ற உயிருடன்
வந்து சேர்கிறோம் நாம், வீடு நோக்கி..




Saturday, June 19, 2010

வலம் வரும் நினைவுகள்...

Photobucket

புரியாத புதிரொன்றில்
மூழ்கி முத்தெடுத்து
மூச்சு முட்டி வெளியே வந்தேன்;
மறுபடியும் சிரித்து வைக்கிறாயே!!
இன்னொரு புதிராக;
திக்குமுக்காடிப்போகிறேன் நான்....

கன்னம்தொட்டு நீர் துடைத்து,
மடி தந்த அக்கணத்தில்;
மகளே,
தாயுமானாய் நீ;
கரைந்து போகிறேன்...

உயிரைப்பிய்த்துக் கொடுத்தபின்னான
வலியின் காயத்திற்கு
புன்னகை மருந்திடும்
இறக்கைகளில்லா செல்லதேவதை நீ;
லேசாகிப்போகிறேன்...

பாசமுடன் பாசாங்கும்காட்டி
பிரிந்து சென்ற
உன் இருப்பை உணர்த்திச்செல்கிறது,
வெற்றுக்கூட்டில் எதிரொலிக்கும்
நிசப்தமான கொலுசொலி;
எனது வெறுமைக்கு துணையாக..
பெருமூச்செறிகிறேன்......


(படம்: சுட்டது:-))

Wednesday, June 16, 2010

சில பொழுதுகள்...




நானே நானாக,
அதுவும், நானாக
பிரதிபலிப்பில் இல்லை மாற்றங்கள்.

எதுவும் நீயில்லையென்று
கூக்குரலிடும் மனசாட்சியை,
குரல்வளையை பிடித்து
வாதிட்டு வென்றபின்;
நானேதான் என்று
ஆசுவாசமடைகிறேன்.

என்னைப்போலிருக்கும் நானுக்கும்
நானென்ற எனக்கும்
முரண்பாடுகள் இல்லாத பட்சத்தில்,
சேர்த்து வைத்த
பிம்பங்களையெல்லாம்
வழித்துப்போட்டுவிட்டு;
உயிரற்று நிற்கிறது நிலைக்கண்ணாடி.

Tuesday, May 18, 2010

ஒற்றை இறகு.

அருகருகே அமர்ந்து
அலகுகள் உரசி,
அன்பைப்பரிமாறும்
அந்த மின்னல் கணங்களில்;
என்ன பேசிக்கொள்ளுமாயிருக்கும்
அந்த குருவிகளிரண்டும்?!!!

தானியம் கொத்தும்
அந்த
அவசரமான கணத்திலும்,
கீச்..கீச்.. என்ற செல்லச்சண்டைக்கிடையே
குளித்த இறகைக்கோதும்போது;
தெறித்த
ஒருதுளி சூரியனில்
பிரதிபலித்தன
ஆயிரம் வானவில்கள் !!....

எவரேனும் கவனிப்பதை,
முதுகில் உறையும் கண்களாய்
உணரும்
அந்த வெட்க தருணங்களில் ;
வால் முளைத்த காற்றாடியாய் பறந்தவை
உதிர்த்துச்சென்றன
ஒற்றை இறகை.....




Friday, May 14, 2010

பந்தயக்குதிரைகள்..

ஓடுவதற்குத்தயாராய்
வரிசையில்
பந்தயக்குதிரைகள்:

எண்களுக்குப்பதிலாக
மருத்துவம் என்றும்,
பொறியியல் என்றும்,
சட்டம் என்றும்,
பெயர்கள்
தாங்கி நிற்கின்றன.

என்னதான் கணக்கிட்டாலும்,
எந்தக்குதிரையில்
அதிக லாபம் வரும்
என்னும் விகிதம் மட்டும்;
ஒன்றைவிட ஒன்று மேலாகவே இருக்கிறது.

கொள்முதல் நிறைய விழுங்கினாலும்;
கல்யாணச்சந்தையில்
லாபம் கிடைத்துவிடாதா என்ன????

இன்ன பிறவெல்லாம்
கணக்கில் கொள்ளப்படுவதேயில்லை!!
ஏனெனில்;
லாபமில்லா மட்டக்குதிரைகளாம்
அவை!!,
உலகத்தின் கணக்கில்.












Tuesday, May 11, 2010

இறைந்து கிடக்கும் வார்த்தைகள்.

இறைந்து கிடப்பவற்றில்
எனக்கான வார்த்தைகளை
தேர்ந்தெடுப்பதிலேயே;
என் ஜென்மம் கழிந்துவிடுகிறது.

தேனும் விஷமும்
தடவப்பட்ட அம்புகளாய்,
வார்த்தைகள்
வந்து விழும்போது;
தேனென்று நம்பி
தேர்ந்தெடுப்பவையெல்லாம்,
விஷக்கொடுக்கையும்
ஏன் சேர்த்து சுமக்கின்றன?.

ஆச்சரியம்தான்;
வார்த்தைகள் ஏற்படுத்திய
காயங்களுக்கு,
அதே வார்த்தைகளே
மருந்தாகின்றன.
ஏற்படுத்திய வலி,
அவற்றுக்குத்தான்
இன்னும் புரியவில்லை.

துப்பப்பட்டவற்றைவிட
மென்று விழுங்கப்பட்ட
வார்த்தைகளுக்குத்தான்
வீரியம் அதிகமாம்.
என்றாலும்;
விஷம் சுமக்கும் நாவை மட்டும்,
எந்த மகுடியாலும் அடக்கமுடிவதில்லை.









Sunday, May 2, 2010

இன்று மட்டுமாவது.....

இன்னுமொரு விடுமுறைதினம்.
திட்டம் போட்டாயிற்று,
விடிந்தபின்னரும்
இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்க;
நினைத்த சீரியல் பார்க்க;
விதவிதமாய் விருந்துண்ண;
மதியத்தூக்கத்துக்கப்புறம்
காலாற நடந்துவர....

கீச் கீச் என்னும் குருவியும்,
மெல்ல வீசும் காற்றும்,
தலையாட்டும் இலையும் பூவும்,
கூவிக்கொண்டு செல்லும்
காய்க்கார அம்மாவும்,
அவரவர் உழைப்பில் கவனமாக
இருப்பதைக்காட்டி,
உழைப்பின் மதிப்பைச்சொல்லி
சுட்ட சூரியன்
மேற்கில் மறைந்தான்,
நாள்முழுதும் உழைத்த களைப்பில்.

விடுமுறை கிடைத்த ஆனந்தத்துடன்
சேர்ந்து கொண்டது,
மெல்லிய உறுத்தல்
உள்மனதில்;
வீட்டுப்பணிப்பெண்ணுக்கு
விடுமுறை அளித்திருக்கலாமே!
இன்று மட்டுமாவது.....



பெயர் தெரியா மரம்.


விருட்சங்களாய்
நிமிர்ந்து நின்றவை
விறகுகளாய் நிற்கின்றன.

இந்த இடத்தில்தானே இருந்தது
எனக்கு நிழல் கொடுத்த
அந்த
பெயர் தெரியா மரம்.

உபயோகமற்றுப் போய்விட்டால்
அல்லவா
உயிர் நீப்பதற்கு...

வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கையில்
ஏனிந்த அவசரப்பாடை என்று
புலம்பும் மனதை
சூழ்ந்து கொள்கிறது
ஏதோ ஒரு வெறுமை.


எங்கோ ஒரிடத்தில்,
உயிர் வாழும் இச்சை
ஒட்டிக்கொண்டிருக்கிறது எச்சமாய்...
வெந்தவிந்த உடம்பில்.


டிஸ்கி: என்னுடைய இன்னொரு வலைப்பூவில் வெளிவந்த கவிதையின் மீள்பதிவு.



















Thursday, April 29, 2010

எதிர்காத்து.

வரதட்சணையா
வாங்கியதெல்லாம்;
வட்டிக்கடைக்கு போயாச்சு.
ஆசைப்பட்டு கொடுத்ததெல்லாம்
ஆடம்பரமா தீர்த்தாச்சு..

மாமனார் வீட்ல
பசை கொஞ்சம் கூடுதல்.
கொஞ்சம்போல வழிச்சுக்க,
வழியென்ன இருக்கு?????...

'ஒன்னோட பொறந்த வீட்ல
பாகப்பிரிவினையாமே??.
ஒம்பங்கையும் வாங்கியா...'

கழுத்தைப்பிடித்து
வெளியே தள்ள;
கதவைத்திறந்தவன் திகைத்தான்.

'வந்தா சொத்தோட வான்னு
விரட்டீட்டாரு எம்புருசன்'
நின்றிருந்தாள் தங்கச்சிக்காரி,
கண்ணைக்கசக்கியபடி.

காற்று எப்போதும்
ஒரே திசையில் வீசுவதில்லை.

Thursday, April 8, 2010

மழை...


சட்டென
ஏதோ ஒர் நிசப்தம்
புரிபடுகிறது...

காற்றுக்கு விடை கொடுத்த
இலைகள்,
மோனத்தவத்தில் ஆழ்ந்து விட்டன போலும்;

நீராவிப்பெருமூச்சுடன்
பெருகும் அருவி,
வாய்க்கால்தேடி பயணிக்கையில்;
சபிக்கப்படுகிறது வெங்கோடை...

பளீரெனச்சிரிக்கும்
மழலையென,
வானம் கண்சிமிட்டுகையில்,
பொக்கைவாய் புன்னகையென,
காற்று வந்து தழுவுகையில்;

எதிர்பாராமல்
மண்ணில் வந்துஇறங்குகிறது..
ஒரு துளி உயிர்.













Tuesday, March 16, 2010

முடிவில்லா தேடல்..

மனிதனே,
இந்த விண்ணிலும்
மண்ணிலும்
நீ எதைத்தேடி
அலைகின்றாய்;

எட்டாத உயரத்தில் கூட ஏறிச்சென்று,
நீ எதைப்பிடிக்க
முயலுகின்றாய்?

நாம் பறக்க விட்டுவிட்ட
மனிதாபிமானத்தையா!
அல்லது,
குழி தோண்டிப்புதைத்து விட்ட
பண்பாட்டையா?

கடவுளைப்போலவே
இவைகளின்
இருப்பும், சந்தேகத்துக்கிடமாகி
வெகு காலமாகிவிட்டது.

விலைவாசியுடன்
போட்டி போட்டுக்கொண்டு
நீ பறந்தது போதும்;
சற்றே உன் இறக்கைகளுக்கு,
இளைப்பாறல் கொடு.

கற்பனைச்சிறகுகளினூடே
தெரியும் நிஜ உலகத்தை;
உன் மூன்றாவது கண்
கண்டுபிடிக்கட்டும்.

உயர்ந்த குறிக்கோள்களுக்காகவே
படைக்கப்பட்ட வாழ்வின்;
முடிவில்லா தேடலின் முடிவில்
ஏதேனும் மிஞ்சும்.


Saturday, March 13, 2010

கான்க்ரீட் காடுகள்..



காடுகளை அழித்து
இன்னொரு காடு.
மனித நேயம்
பட்டுப்போனாலும்;
பணம் காய்ச்சி மரங்கள்
நிறைந்திருக்கும் இங்கே..

குயிலோசை ஓய்ந்தாலும்
தொலைக்காட்சி உண்டெங்களுக்கு
தாலாட்ட..
மார்கழிப்பனியாய்
தொழிற்சாலைப்புகை இருக்க
ஏலோரெம்பாவாய் பாட
எழுந்திருப்பதில்லை நாங்கள்.

விருட்சங்கள் கூட
எங்கள் வீடுகளில்,
இயல்பைத்தொலைத்து,
குறுகி நிற்கின்றன.

வாழ்விடம் போலவே
மனமும் குறுகிப்போய்,
கான் கிரீட் காடுகளில் வாழும்
நாங்களும் ஆதிவாசிகள்தாம்.


Monday, March 1, 2010

சுதந்திரம்???..

கண்ணுக்குத்தெரியாத
தளைகளால்
பிணைக்கப்பட்டிருக்கிறேன்..

பூட்டுகள் எதுவும்
இல்லைதான்...
ஆனாலும்
விடுபடவும் முடியவில்லை!!!!

உனது விருப்பங்களெல்லாம், என்றோ
எனது
விருப்பங்களாகிவிட்டன:
எனக்கென்று ஓர் மனம்,
அதை நினைத்ததேயில்லை நீ..

எனக்கான
பிறரது கேள்விகளுக்கு;
பதில் சொல்லும் குரலாக
உன் குரல் மட்டுமே ஒலிக்கின்றது.

குனிந்து கொடுத்தே குறுகிப்போன
முதுகின் மேல்,
ஏற்றப்படுகின்றன
வேண்டியமட்டும் பாரங்கள்;

சுமந்தே களைத்துப்போன
என்னைக்காட்டி
பெருமையடிக்கிறாய்:
சுதந்திரமாய் வைத்திருப்பதாக!!!!

ஆணுக்கும் பெண்ணுக்கும்
இங்கே அளவுகோல்
வேறாக இருக்கும்வரை
எதைச்சொல்வாய் நீ??
உண்மையான சுதந்திரமென்று??!!!..

Friday, February 26, 2010

நிழல்கள்...


சுயம் தொலைத்து
நான் மீண்டபின்னும்;
இன்னும்,
அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறாய்...

விலகி ஓட முயன்று

தோற்றுத்திரும்பி;
காலடியிலேயே
வந்து சுருண்டு கொள்கிறாய்;
விசுவாசமான நாய்க்குட்டியைப்போல்...

தொடர்ந்துதான் வருகிறாயென்று
தொடர்ந்து, நடந்தால்
திடீரென்று காணாமல் போகிறாய்!!!
எதிர்பாரா நேரம் எதிரே வந்து
கண்ணாமூச்சி காட்டுகிறாய்.

உன் நண்பன் நானென்று
கைகோத்து வந்துவிட்டு;
சொல்லாமல் கொள்ளாமல்
போவதை,
என்ன பெயரிட்டு அழைக்க!!!
நீ நிழலா??? ..மனமா???..

Thursday, February 25, 2010

நாற்றங்கால் பந்தம்

வேரோடும் ,
வேரடி மண்ணோடும்,
பிடுங்கிய பின்
செடிக்கில்லை ,
நாற்றங்கால் பந்தம்.

அடுத்த நொடியே
மறந்துபோக
எப்படித்தான் முடிகிறதோ!!!!
இன்னொரு தோட்டம் சென்றுவிட்டால்
வேரடிமண் காய்ந்துவிடுமா என்ன!!!!

புது மண்ணில்
துவளுது குழையுது,
வேர் பிடிக்க
சில காலமாச்சுது.
புதுப்பூரிப்போட இளங்குருத்தும்
பூவும் பிஞ்சும் இருந்தாலும்,
வாழ்வென்னவோ
சூரியன் முகம் பார்த்துத்தான்.

நீர் தேடிச்செல்லும் வேர்கள்
கொஞ்சம்
நினைவுகளும் தேடிச்செல்லுமா???

விடைகிடைத்தது
கடைசியில்...
சருகாகிப்போனபின்பும்
வேர் நுனியில் இருந்தது,
நாற்றங்கால் , மண் வாசனை....
பெண்ணும்,பயிரும் ஒன்றுதானோ
இந்த மண்ணில்!!!....






Monday, February 15, 2010

சில நினைவுகள்

நினைவுகளின் சுமைகளில்
அழுந்தி விடா வண்ணம்
என்னை நானே
மீட்டெடுத்துக்கொள்கிறேன்...

குட்டிக்குரங்காய்
தொற்றிக்கொண்டு
கூடவே வரும் நினைவுகளை
உதற முயன்றிருக்கலாம்...

சில நினைவுகள்
புன்னகைகளை விதைத்து விட்டு
செல்கின்றன.
சில நினைவுகள்
கண்ணீரை
அறுவடை செய்கின்றன்.

அருவியைப்போல்
தடதடக்கும் சில நினைவுகள்
குப்புறத்தள்ளி வேடிக்கை பார்க்கும்...
அழகான சில நினைவுகள்
ஆறுதலும் சொல்லும்...

சளசளவென்ற ஓயாத
நினைவுகளிலிருந்து
விடுதலை எங்ஙனம்!!!!!

அன்பெனும் மழையில்..

உனக்கான என்னை
நீயும்
எனக்கான என்னை
நானும்
கண்டு கொண்டதில்
ஆரம்பித்தோம்
நமக்கான நாம்.

**********************

ஊடலுக்குப்பின்
காதல்
இது பழமொழி
ஊடலுக்குப்பின்
ஊடல்
இது
காதலர் மொழி

**********************

இன்னும்
எத்தனைமுறை வேண்டுமானாலும்
விழுவேன்
தாங்கிக்கொள்ள
உன் கரம் இருந்தால்.

**********************

தினமும் பார்த்துக்கொள்ளவில்லை
பரிசுகள் என்னும்
உரமிடவுமில்லை
ஆனாலும் செழிக்கிறது
நாம் வளர்த்த பயிர்
அன்பெனும் மழையில்.

**********************
உன் கூந்தலில்
ரோஜாவை சூட்டியதால்
மற்ற மலர்களெல்லாம்
நிறமிழந்து போயின.
உன் கூந்தல் வாசத்தின் முன்
ரோஜாவோ
வாசமிழந்து போனது.

**********************

காதலர்களுக்குத்தான்
காதலர் தினம்
நமக்கெதற்கு!!!!
நாம்தான் தினம் தினம்
உயிர் வாழ்கிறோமே!!!
காதலை சுவாசித்து.