Pages

Tuesday, February 27, 2024

நல்லாச்சி - 51

அவ்வைக்கிழவி நம் கிழவி
அருமை மிகுந்த பழங்கிழவி’
குரலெடுத்துப்பாடிக்கொண்டிருக்கிறாள் பேத்தி
வாய்க்காலில் அளைந்து விளையாடியவாறு
நல்லாச்சியோ
கொழுக்கட்டை மாவிலொரு கண்ணும்
பிடுங்கக்காத்திருக்கும் குரங்கின்மீதொரு கண்ணுமாக
சுள்ளி சேகரித்துக்கொண்டிருக்கிறாள்
அடுப்பெரிக்க

பச்சரிசி மாவும் தேங்காயும் வெல்லமுமாய்
பிணைந்து பிணைந்து பிசைந்துருட்டி
அடுப்பில் வேகும் கூழ்க்கொழுக்கட்டைகள்
வனாந்திரத்தையே நாவூறச்செய்ய
கருவறையில் காத்திருக்கிறாள்
ஓளவையாரம்மன் 
அமுதம் பருக

கொழுக்கட்டை வாசனை தீண்டிச்செல்ல
பேத்தியின்
சின்ன மூளைக்குள்ளொரு சந்தேக மொட்டு விரிகிறது
ஓடோடி வருகிறாள் 
குடைந்த கேள்விகளை
எடுத்து வீசுகிறாள் நல்லாச்சியிடம்
“அதியன் கொடுத்த நெல்லிக்கனி இவளுக்குத்தானே?
சுடாத பழம் போடென்று குமரனிடம் கேட்டவள் இவள்தானே?”
ஆமோதிக்கிறாள் நல்லாச்சி

‘எனில்
சுட்ட கொழுக்கட்டையா? சுடாத கொழுக்கட்டையா?
இச்சமயம் அவள் வேண்டுவது யாதென
எங்ஙனம் நாம் அறியக்கூடும்?
பல்லில்லாப் பாட்டிக்குப் பதமானது ஏது?’
விழிமலர்த்தி வினவும் பேத்திக்கு
பதிலுரைக்கா நல்லாச்சி
ஒளவையாரம்மன் என்ன சொல்வாளோவென
அமர்ந்திருக்கிறாள்
‘அவ்வைக்கிழவி நம் கிழவி
அருமை மிகுந்த பழங்கிழவி’
பாடியவாறே அடுப்புத்தள்ளுகிறாள் பேத்தி.