Pages

Sunday, November 22, 2020

நல்லாச்சி - 9



மந்தையில் மேயச் சென்ற செவலைப்பசு
அந்தி மயங்கியும் வீடடையவில்லை
காடுகரை மேய்ந்ததோ
கால் வழுக்கித்தான் விழுந்ததோ
பயிர் பச்சை கடித்ததோ
பவண்டில்தான் அடைபட்டதோவென
எதிர்படுவோரிடமெல்லாம் 
புலம்பித் தீர்க்கிறாள்
காத்துச்சலித்த நல்லாச்சி
செய்தித்தாளில் 
விளம்பரம் தரலாமென அறிவுறுத்தும்
பட்டணத்துப் பேத்தி அறியாள்
உள்ளூரில் அலமுறையிடுவதும்
பத்திரிகையில் பகிர்வதும்
வெவ்வேறென்றாலும்
பலனொன்றே என்பதையும்
இரண்டொரு நாளில் 
தேடல் தீர்ந்து விடுமென்பதையும்.

நல்லாச்சி - 8



மேனி குலையாதிருக்கும் கதிரவனை விட
தினம் தேய்ந்து வளரும் நிலவின் மேல்
தனிப்பிரியம் பேத்திக்கு
நாளுக்கு நாள் அது மெலிவது குறி்த்து
ஆயிரம் கேள்விகள் அவளிடம்
எல்லாவற்றையும்
நல்லாச்சியை நோக்கி வீசினாலும்
"அதுக்கு மேலுக்குக் கெதியில்லை"
என்றொரு பதிலை
அவளாகவே சொல்லிக்கொள்வாள்
நிலவில்லா ஒரு அமாவாசை வானில்
தேடி ஏமாந்த பேத்தியிடம் 
"அது ஆசுத்திரிக்கிப் போயிருக்கு" என
நல்லாச்சி இயம்பியதிலிருந்து
பூரணப் பிரகாசத்துடன் வரவிருக்கும்
நிலவுக்காகக் காத்திருக்கிறாள் பேத்தி
இன்னொரு நிலவாக.

நல்லாச்சி - 7

தங்க அரளி செம்பருத்தி பிச்சி அலமெண்டா என
பல வண்ணப்பூக்களுண்டு
பூஜைக்கென 
நல்லாச்சியின் தோட்டத்தில்
புலருமுன் அத்தனையும் பறிக்கப்பட்டு
தாத்தாவின் கைங்கர்யத்தால்
இறைவனைச்சென்றடையும் 
விடியலில் வந்த தேன்சிட்டொன்று
ஏமாந்து புலம்பியதையும்
வண்ணத்துப்பூச்சிகளெல்லாம்
தோட்டமெங்கும் தேடி அல்லலுற்றதையும்
பேத்தி கவனித்த தினத்திலிருந்து
செடிகொடிகள் இழக்காமலிருக்கின்றன
இறைவனுக்கு மானசீகமாகச் சமர்ப்பிக்கப்பட்ட
தத்தம் பூங்கிரீடத்தை
ஆலோசனை சொன்ன நல்லாச்சிக்கு
நன்றி நவின்றபடி.