Pages

Friday, January 20, 2023

நல்லாச்சி - 47


வேப்பிலைப்பொடியும் மாவிலைப்பொடியும்
கலந்தெடுத்துத்
தூபம் போடுகிறாள்
வேப்பெண்ணெய் நிறைந்த சிற்றகல்களை
ஒவ்வோர் அறையிலும் ஏற்றுகிறாள்
அண்டைஅயலார் உரைத்தபடியெலாம்
உபாயங்கள் கைக்கொண்டு
எதற்கும் இருக்கட்டுமென
துளிச்சொட்டு மருந்தையும்
பேத்தியின் ஆடையோரம் தெளித்து
வீட்டையே அதகளப்படுத்துகிறாள்
பேத்தியின் கன்னத்தில் 
சிறு தடிப்பு கண்ட நல்லாச்சி
அத்தனைக்கும் தப்பி
காதோரம் ரீங்கரித்துப்பாடும் கொசுவை
ஏதும் செய்யமாட்டாமல் குமையும்
நல்லாச்சியிடம்
கூட்டாக எசலுகின்றனர் தாத்தாவும் பேத்தியும்
இந்தக் கொசுத்தொல்லை தாங்கவில்லையென.

0 comments: