Pages

Monday, May 29, 2023

யானைப்பூச்சி


இத்தனை விகாரமாய்ப் படைத்திருக்க வேண்டாம்
நொந்து கொண்டபடி
ஆலமரத்தினடியில் சயனித்திருந்தது
மந்தையிலிருந்து பிரிந்து வந்துவிட்ட
புத்திளம் யானைக்கன்று

எதற்கென்றே தெரியாமல்
இரு பெரும் காதுகள்
இப்பிறவியில் மெலிய வாய்ப்பில்லா
மஹாகனம் கொண்ட பேருடல்
இடையிடையே இடையூறாய்
வந்து நெளியும் நீள்மூக்கு
தெண்ணீரில் தன்னுருவென 
தான் கண்டதையெண்ணி
இன்னும் மனம் கலங்கிற்று

தாவும் மான் தொடங்கி தோகை மயில் ஈறாக
அதன்
அழுத கண்ணீர் துடைத்தன
ஆறுதல் தோற்று நின்றன
தூக்கத்தைத் துக்கம் வென்றெடுக்க
துக்கத்தைக் கொடும்பசி தோற்கடிக்க
அலமுறையிட்டு அழுதது யானைக்கன்று

அழுகையின் வீரியம் கூடுந்தோறும்
படபடத்த காதுகள்
அடித்துக்கொண்டு வானேகின உச்சநொடியில்
இப்போதெல்லாம்
அந்த யானைக்கன்று கலங்குவதில்லை
மலருக்கு மலர் தாவிக்கொண்டிருக்கிறது
தும்பிக்கையால் தேனுறிஞ்சியபடி.

0 comments: