Pages

Thursday, March 31, 2022

நல்லாச்சி - 29


பொலிந்து நிற்கிறது
பொற்கொன்றை மரம்
தொட்டடுத்தொரு மஞ்சாடி மரம்
பொன்னாய்ப் பாவித்து பூவை
நிறுத்து விளையாடுகிறாள் பேத்தி
கண்ணாடித்துண்டுகளே வைரவைடூரியங்கள்
கொற்கை முத்துகளுக்கோ யாதொரு பஞ்சமுமில்லை
போணி செய்ய வரும் நல்லாச்சி
பேத்தியின் கோலங்கண்டு
புன்னகை உறைய நிற்கிறாள்
இழுகிய மகரந்தப்பொற்பொடியால் வதனம் துலங்க
செவியணிந்த செம்பருத்தி மொட்டுகள்
லோலாக்காய் ஆட
செம்பூவிதழ் நுதலில் செந்தூரமாய்த் துலங்க
அமர்ந்திருக்கிறாள்
குளிர்ந்த கொற்றவையாய் பேத்தி
கொன்றை தூவிய பிரியத்தின் சில இதழ்கள்
படிகின்றன பேத்தியின் தலையில்
சொடக்கிட்டு கண்ணேறு கழிக்கிறாள் நல்லாச்சி

0 comments: