Pages

Friday, May 6, 2022

கோமாளிப்புன்னகை


சர்க்கஸ் கோமாளிகள் நகைக்கிறார்கள்
அது அவர்கள் உலகம்
வலியில்லா வேதனையில்லா அழுகையில்லா
அபூர்வ உலகம் அவர்களுடையது
கேலி செய்வோரையும் வாய்மூட வைக்கும்
சுய எள்ளல்வாதிகள் அவர்கள்
விழுவதையெண்ணிப் பயந்தால்
பறப்பதெப்போது 
என்ற சித்தாந்த வாதிகள்

சொந்த ஊரில் மரமேறிப்பிழைத்தவன்தான்
இதோ
அடிக்கொரு தரம் தடுக்கிவிழுந்து 
அழுது ஊரைக்கூட்டுகிறான்
கிணற்று உள்நீச்சலில் கைதேர்ந்தவன்தான்
ஓரடி உயரத்திற்கே 
பாசாங்காய்ப் பயப்படுகிறான்
தோட்டாவாய் 
திணித்துக்கொண்ட பீரங்கி துப்பியதும்
அலறிப்பறக்கும் அவனைக்கண்டு
வெடித்துச்சிரிக்கிறது அரங்கம்
முகப்பூச்சுதான் 
எத்தனை வசதியானதாக இருக்கிறது
உணர்வுகளையெல்லாம் மறைக்க
வயது வேறுபாடின்றி 
அத்தனை பேரும் ரசிக்கும் அவன்மேல்
பசிக்குப் பெருங்காதல் 
அவனுக்கோ கலைமேல்

தன்னை வருத்திப் 
பிறரை மகிழ்விக்கும் அவன்
ஓர் நாள்
துடித்துத் துவண்டதையும் 
மெதுவாய் அடங்கியதையும்
கேளிக்கையாகவே எண்ணி
இவ்வுலகம்
கை தட்டிக்கொண்டிருக்கிறது உரக்க
பிறர் நகைக்க தானழுதவன் இதழ்களில்
இன்று
உறைந்து நிற்கிறது புன்னகை.

0 comments: