Pages

Sunday, August 28, 2022

நல்லாச்சி - 34


"ஆக்கறவனுக்குப் பல நாள் வேலை
அழிக்கறவனுக்கு ஒரு நிமுசந்தான்"
சொலவம் சொல்லியவாறு
வெற்றிலை போடத்துவங்குகிறாள் நல்லாச்சி
பாக்கு இடிபடுகிறது உரலில்
செத்தோல இழுவுகிறாள் சுண்ணாம்பை
காம்பும் நுனியுமற்ற வெற்றிலையின் முதுகில்
மூன்றையும் வாய்க்குள் அடக்கிய
ஒரு நிமிடத்தில்
சிவக்கிறது வாய்
நிறைவுறுகிறது நெஞ்சம்
கண்கொட்டாமல் கவனித்திருந்த பேத்தி
ஆமாமென ஆமோதிக்கிறாள் ஆச்சியின் கூற்றை
வெற்றிலை விளைய எத்தனை நாளோ
கமுகு பழுக்க எத்தனைக் காலமோ
சுண்ணாம்பு பக்குவப்பட எத்தனைப் பொழுதோ
அத்தனையையும் ஒரு நிமிடத்தில் மென்றுவிட்டாயே
வாய்க்குழம்பு சிதறாதிருக்க அடக்கிய சிரிப்பால்
புரையேறுகிறது ஆச்சிக்கு
நமுட்டுச்சிரிப்புடன் அகல்கிறாள் பேத்தி

0 comments: