Pages

Thursday, August 13, 2015

நல்லாச்சி.. (3)

அருவியைப் படத்தில் பார்த்து வியந்த நல்லாச்சியிடம்
பம்ப்செட் பார்த்து அதிசயித்த பேத்தி
பெருமைப்பட்டுக்கொண்டாள்
உலகிலேயே பெரிய அருவி இருப்பது
தன்னூரில்தானென்று

அருவியென்பது ஒரு பெரிய பம்ப்செட்தான்
பம்ப்செட் என்பதும் ஒரு சிறிய அருவிதானென்று
நமுட்டுச்சிரிப்போடு சொல்கிறாள்
கிணறுகள் தோறும் அருவிகள் கொண்ட
ஊரிலிருக்கும் நல்லாச்சி
அவள் பங்குக்கான பெருமையோடு..
********************************************

எழுதப்படிக்க பேத்தியும்
மாக்கோலமிட நல்லாச்சியும்
ஒருவருக்கொருவர் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தனர்
இருவரிடையேயும் பிணக்கு ஆரம்பித்தபோது
அவ்வீட்டிலிருந்து கிளம்பிய கோடுகள் இரண்டும்
அண்டசராசரமெங்கும் சுற்றியலைந்து
களைத்துத்திரும்பியபோது
பேத்தியின் ஒற்றைப்புள்ளிக்கோலத்தையும்
ஆச்சியின்
சற்றே வாய் பிளந்த 'அ'னாவையும்
பாராட்டிக்கொள்ளும் பெருந்தன்மை
வாய்த்திருந்தது இருவருக்கும்.

வால்: வெளியிட்ட அதீதம் மின்னிதழுக்கு நன்றி.

2 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான கவிதைகள்.

Thulasidharan V Thillaiakathu said...

அட அருமையான கவிதைகள்!