Pages

Friday, August 14, 2020

எரிந்த வீடு..

வாசற்கோலத்தின் மேல் இழையிட்டிருக்கும் கரிநீரும்
எரிநாக்குகள் தீண்டித் தீய்த்த சுவர்களும்
பொசுங்கிய பொம்மைகளும்
கருகிய பொருட்களுமாய்
தீக்காயங்களுடன் நிற்கும் அவ்வீட்டின்
கருகிய மேற்கூரை
வழி இறங்கிய மழைத்தாரைகள்
அணைந்தும் கனன்ற அடுப்பை
மொத்தமாய் அவித்தன
ஆறுதலாய் அழுத்தி விட்டு
பல கரங்கள் நழுவிக்கொணடாலும்
கொண்டு வந்து ஊட்டும் சில கரங்கள்
தோழமையுடன் படிந்து கொண்டன.
உயிர் தப்பித்தலின் ஆசுவாசம் படியுமுன்னரே
நாளை என் செய்வேமென்ற
பாதுகாப்பின்மை தன்னை நிறுவிக்கொண்டது.
நட்சத்திரங்களையே கூரையாய்க்
கொண்டிருக்கும் இவ்விரவில்
கண்ணீர்க்கறை துடைக்கவொட்டா கைகளொடும்
காற்றே தூளியாய்க்கொண்டுறங்கும் சிசுவோடும்
எங்ஙனம் உறங்கும்
தீக்குத் தன்னைத்
தின்னக்கொடுத்த அவ்வீடு.

1 comments:

Yaathoramani.blogspot.com said...

தீக்குத் தின்னக் கொடுத்த வீட்டின் சோகம் இப்போது எம்முள் தீயாய்ப் பற்றி எரிகிறது...அற்புதமான கவிதை..வாழ்த்துகளுடன்..