Pages

Thursday, July 18, 2024

நல்லாச்சி


நல்லாச்சியின் பேத்தியை
வம்பிழுப்பதே
செல்லாச்சியின் பொழுதுபோக்கு
கூறத்தகாததைக் கூறாதேயென
நல்லாச்சி அறிவுறுத்தியும்
மாற்றமேதுமில்லை
செல்லாச்சியின் போக்கில்
வம்பிழுத்து வதைத்து
பிறரைக் கண்ணீர் சிந்த வைப்பதில்
சிலருக்கு ஏனோவொரு அற்பதிருப்தி
கல்லின்மேல் எழுத்தெனவும்
பசுமரத்தாணியெனவும்
தம் சொற்கள் சென்று தைக்குமேயென
அவர்கள்
கிஞ்சித்தும் யோசிப்பதில்லை
மழைக்காளானென அவை
பிறர் மனதில் பெருகிக்கிடப்பதையும்
ஊவாமுள்ளென காயப்படுத்துவதையும்
அறியாதவரல்லர் அவர்
ஆயினும் அப்பழக்கத்தை
கைவிட்டாருமில்லை
பேத்தியை 
நல்லாச்சி கண்டிக்கும் பொழுதுகளில்
'ஒன்ன தவுட்டுக்கு வாங்கினா ஒங்காச்சி
அதாம் உறுத்தில்லை ஒம்மேல' என்பாள்
'உன்னை கோவில்ல கண்டெடுத்தா நல்லாச்சி
அவளுக்குப் பேரன்தான் பெருசு' என்பாள்
'பொட்டப்புள்ள.. அடுத்தூட்டுக்குப் போறவதானே' என்பாள்
உதடு பிதுக்கி 
பேத்தி அழுவதையோ
கண்ணீர் கட்டிநிற்க அவள்
மெளனமாய்க் குனிவதையோ
சிறிதும்
சட்டை செய்தாலள்ளள்
ஒருநாள்
திண்ணையிலிருக்கும் செல்லாச்சியை
அவள் மகன் சடைவது கேட்டு
பேத்தி ஓடிச்சென்று நிற்கிறாள் 
கனன்ற விழிகளுடன்
சொற்போர் தொடுக்கிறாள்
'அவங்களைத் தவுட்டுக்கு வாங்கினீங்களா
எங்கியும் கண்டெடுத்தீங்களா
அதாம் உறுத்தில்லாம ஏசுதேளா'
அடுக்கிக்கொண்டே போகிறாள் சின்னவள்
அடிவாங்கினாற்போல் உறைகிறாள் பெரியவள்
'விதைச்சதுதான் கிடைக்கும்'
பார்வையால் அறிவுறுத்துகிறாள் நல்லாச்சி
புரிந்து தலைகவிழ்கிறாள் செல்லாச்சி
'ஆச்சி பாவம்' என்றபடி 
மடியில் முகம் புதைக்கிறாள் பேத்தி
அவள் தலைமேல் படிகின்றன
இருகரங்களும் ஆசீர்வாதமாய்.

No comments: