இரு வேறு வானிலைகளில் சில நிமிடங்களுக்காய்
தோன்றி மறையாமல்
எல்லாக் காதல் நிலைகளிலும்
அன்பின் பேரொளியாய் நிலைத்து மிளிர்கிறது
காதல்வெளியின் வானவில்
எண்ணங்கள் குழைத்து வண்ணஞ்சேர்த்து
மனப்பரப்பில் தீட்டிய அந்த ஓவியம்
காத்திருப்பிற்கொரு நிறம்
ஊடலுக்கொரு நிறம்
பிரிவிற்கொரு நிறம்
இணைவதற்கொரு நிறமெனக் கொண்டு
காலங்கள் நீளுந்தோறும் இன்னும் இன்னுமென
அழுத்தமாய் நிறமேற்றிக்கொள்கிறது
காதல்வசந்தம் பூக்கிறது அங்கே
வாழ்த்தும் வசந்தங்களின் பூஞ்சாரலில் நனைந்து
முரலும் வண்டுகளின் பொற்சிறகுகளை
இரவல் வாங்கிய பட்டாம்பூச்சிகள்
காதல்வெளியெங்கும் பறந்து திரிகின்றன
காதலின் வண்ணங்களைப் பரப்பியபடி
டிஸ்கி: முகநூலில் தோழி பிரபாதேவி நடத்திய போட்டியில் பரிசு பெற்ற கவிதை.