Pages

Saturday, July 26, 2025

நல்லாச்சி


வழக்கத்திற்கு மாறாக
முகம் வாடி அமர்ந்திருக்கிறாள் நல்லாச்சி
கூம்பிக்கிடக்கும் அல்லியொன்று
வாடித் தளர்ந்துமிருப்பது போல் 
சற்றே தலை சாய்த்து பார்வையை
நிலத்தில் சரிய விட்டிருக்கிறாள்
கனலும் பெருமூச்செறிந்து
ஆறுதலுக்குத் தவிக்கிறாள்.

அதிரும் அமைதியை
பொறுக்கவியலாத பேத்தி
மெல்ல நெருங்கி வருகிறாள் 
‘கவுந்த கப்பலையெல்லாம் நிமுத்திரலாம்’
என குறும்பாய்
நாடி தாங்கிக்கொஞ்சுகிறாள் நல்லாச்சியை
‘விலையுள்ளவை ஆயிற்றே
விழியிற் பிறக்கும் முத்துகளை 
வீணாக்கலாமா’
வினவியபடி விழிநீர் துடைத்தவளை
அள்ளி மடியிருத்துகிறாள் இராஜமாதா
ஆதுரத்துடன் முதுகு வருடுகிறாள் இளவரசி

சுயநலம் துரோகம் மோசடி உள்ளரசியல் என
இற்றுப்போன இழைகளால்
வலை பின்னும் சுற்றமெலாம்
தன் சதிக்குள் தானே அகப்பட்டுக்கொள்ளும்
செய்தார் செய்த வினை கொய்வார்
அம்பலப்பட்டுத் தலை குனிவார்
என்பதுதானே விதியின் நியதி
புன்மதியாளர்க்கு இன்மதி கிட்டுவதேது
எண்ணித்தெளிகிறாள் பெரியவள்
வருடி வருடி கவலையையெல்லாம்
இறக்குகிறாள் சின்னவள்

பேத்தியின் இளந்தோள்களில் முகம் புதைத்து
துண்டுதுண்டாய் உடையும் துயரத்தை
பனிக்கட்டியாய்க்கரையும் பச்சாதாபத்தை
அடித்துச்செல்லப்படும் ஆதங்கங்களை
காற்றில் தூசாய்க்கலக்கும் கவலைகளை
யாரோ போல்
வேடிக்கை பார்க்கிறாள்
கனத்தையெல்லாம் இறக்கி விட்டு
லேசான மனதுடன் புன்னகைக்கிறாள் நல்லாச்சி
வளையல் கலகலக்கும் கரங்களால்
இன்னும்
ஆறுதலளித்துக்கொண்டுதானிருக்கிறாள் பேத்தி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட 'பண்புடன்' மின்னிதழுக்கு நன்றி.

Friday, July 18, 2025

நல்லாச்சி


கொக்கு பற பற
கிளி பற பற
விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்
நல்லாச்சியும் பேத்தியும்

இறகும் சிறகுமுள்ளவையெல்லாம் பறக்கும் 
அதே நேரத்தில்
நாலு காலுள்ளவையும்
இரு கால் பிராணிகளும் கூட பறக்கின்றன
சந்தடி சாக்கில்
விடை பிழைத்தவர் 
வென்றவர் சொல் பணியவேண்டுமென்பது
விளையாட்டின் விதி
வெற்றிகளை
ஒவ்வொன்றாய்ச்சேர்த்து வைத்து
மொத்தமாகவும் அனுபவித்துக்கொள்ளலாமென
திருத்தம் கொணர்கிறாள் பேத்தி
உடன்படுகிறாள் நல்லாச்சி

ஏறுபுள்ளிகளும் இறங்குபுள்ளிகளுமாய்
இருவரின் கணக்கிலும்
ஏய்க்க முடியாத
வரவு செலவு எக்கச்சக்கம்
அதில்
நல்லாச்சி ரகசியமாய் விட்டுக்கொடுத்ததெல்லாம்
கள்ளக்கணக்கு
பறக்கும் குதிரையையெல்லாம் கண்டிருப்பதாக
பேத்தி அடித்துச்சொல்லும்போது
என்னதான் செய்வாள் ஆச்சி
பறக்கும் தட்டை
ஒரு முறை அடுக்களையில் கண்டதாக
அவள் சொன்னபோது மட்டும்
தலையைகுனிந்து கொண்டார் அப்பா

பேத்திகளின் உலகில்
எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் 
இறக்கைகள் முளைத்திருக்கின்றனவே
கைகளை அசைத்தால் 
நல்லாச்சி கூட பறக்க முடியுமென்று
அவள் ஆணித்தரமாய்ச்சொல்கையில்
நல்லாச்சியே நம்பி விட்டாள் ஒரு கணம்
நன்றாய்த்தானிருந்தது அக்கற்பனை
இறக்கைகளிருந்தால் சாத்தியமாகுபவற்றையெல்லாம்
வர்ணித்து வர்ணித்து விரியச்செய்து
எங்கெங்கோ பறந்து கொண்டிருக்கின்றனர்
நல்லாச்சியும் பேத்தியும்
விளையாட்டு கிடக்கிறது ஒரு மூலையில்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Friday, July 11, 2025

நல்லாச்சி


குப்பைகளைத் தரம்பிரிக்க
கற்றுக்கொடுத்திருக்கிறார்களாம் பள்ளியில்
மக்கும் குப்பை மக்காக் குப்பை என
உதட்டுக்குள்ளேயே அடிக்கடி
சொல்லிப்பார்த்துக்கொள்கிறாள்
வீட்டிலிருக்கும் பொருட்களையெல்லாம்
எதெது எவ்வகையென 
மனசுக்குள்ளேயே குறிப்பெடுக்கிறாள்
இனி நான் ஒப்புதலளித்த பின்னரே
எவ்வொரு குப்பையும் வெளியேற வேண்டும் 
புது விதியொன்றை வரைகிறாள்
வகைபிரித்துப் போடவென
தொட்டிகளையும் அடுக்கச்சொல்கிறாள்

பழத்தோலைத் தெரியாத்தனமாக
மாற்றிப்போட்ட தாத்தா
மாட்டிக்கொண்டு விழிக்கிறார் பரிதாபமாய்
ஒன்றிரண்டு தோப்புக்கரணங்களை 
அபராதமாய் விதித்தபின்
பெரிய மனசுடன் மன்னிக்கிறாள் பேத்தி
வீடே குப்பையின் பின்னால் ஓடுகிறது
பேத்தியின் ரகளைக்கு நடுங்குகிறது
அவளின் அட்டகாசம்
சற்று அதிகமாகவே ஓங்குகிறது வீட்டில்
‘புதுமாடு குளுப்பாட்டுதா.. எல்லாஞ்சரியாப்போகும் 
ரெண்டு நாளில்’ என்றபடி
நமட்டுச்சிரிப்புடன் நகர்கிறாள் நல்லாச்சி
குப்பையை உரமாக்குவதில்
பேத்தியின் ஆர்வத்தை
மடை மாற்றுகிறாள் மெல்ல மெல்ல

அடுத்த தெருவில் ஓர் பாட்டியை
திண்ணையில் ஒதுக்கிவிட்டார்கள் குப்பையைப்போல்
ஆற்றாமையுடன் அரற்றும் நல்லாச்சியை
துளைத்தெடுக்கிறாள் பேத்தி
ஒதுக்கப்பட்டவர்கள் எவ்வகை என
நினைவில் பிரகாசிப்போர் ஓர் வகையெனில்
இருக்கும்போதே மங்குபவர் இன்னொரு வகை
அவரவர் செயற்பாடுகளால்
அவரவரே நிர்ணயிக்கின்றனர் 
எவ்வகையாயினும் புறக்கணித்தல் பாவம்
என்றாள் காலத்தால் கனிந்தவள்

குட்டிக்கைகள் கொள்ளுமட்டும் சுமந்து
எருக்குழி நிரப்பும் பேத்திக்கிரங்கி 
இப்போதெல்லாம்
எண்ணியே இலையும் பூவும் உதிர்க்கின்றன
வேம்பும் மரமல்லியும்
என்கிறாள் நல்லாச்சி
ஆமாமென ஆமோதிக்கிறது
உதிராமல் தவமிருக்கும் பாலைப்பூ
பேத்தி கண்மலருமுன் சுத்தம் செய்துவிடும்
அன்னை மட்டும் முறைக்கிறாள்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி

Friday, July 4, 2025

நல்லாச்சி

p.c. panbudan

அறுவடைக்கென ஆட்கள் வந்திருக்கிறார்கள்
நல்லாச்சி வீட்டு தோப்பில்
வகைவகையாய்
மாங்காய்களும் பலாப்பழங்களும் வாழைத்தார்களுமாய்
கனியக்காத்திருந்தவற்றில்
குத்தகை போக மீதத்தை அடுக்குகிறார்கள்
நல்லாச்சி வீட்டு முற்றம் நிறைய

தரம் பிரித்தபின் அரைக்காய்களை
பழுக்க வைக்க முனைகிறாள் நல்லாச்சி
பலாக்காயின் தண்டில் வேப்பங்குச்சி செருகுகிறாள்
மாங்காய்களை வைக்கோல் மூடிப்பொதிகிறாள்
வாழைத்தாரைக் குழியில் ஊற்றம் போடுகிறாள்
கனல் தூவி
அத்தனைக்கும் அருகிருந்து உதவிய பேத்தி
ஆச்சரியம் அகலாமல் கேட்கிறாள்
புளிப்பும் துவர்ப்புமானவை
எப்படி இன்சுவை கொள்கிறதென

சூழும் நெருக்கடிகளும்
கடந்து செல்லும் சோதனைகளுமாய்
கிடைக்கும் அனுபவங்களனைத்தும்
பக்குவப்படுத்திப் புடம்போடும்போது
கனியத்தானே வேண்டுமென்கிறாள் நல்லாச்சி
முதிர்தலின் சுவை இனிது
தேனூறும் இப்பழங்களைப் போல் என்கிறாள்

எனில் 
மனிதர்களும் கனிவதுண்டா என்கிறாள் பேத்தி
ஆம்
மனம் முதிர்ந்தால் மனிதர் கனிவர்
அனுபவத்தின் சாற்றுடன் அன்பைக் கலந்து
புத்தியைக் குழைக்க பக்குவம் வரும்
பக்குவமடைந்து கனிந்தோர் அனைவரின் விருப்பமாவர்
அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளாதோர்
என்றுமே கனிவதில்லை
பேத்தியின் தலைகோதியபடி
நல்லாச்சி உரைத்த மொழிகளெலாம்
ஊற்றத்தின் புகையென
அவளை
பழுக்க வைக்கத்தொடங்கின
நல்லாச்சி செய்ததெலாம்
சாம்பல் மூடிக்கிடந்த கனலை
சற்றே விசிறி விட்டதுதான்.

டிஸ்கி: பண்புடன் மின்னிதழில் வெளியானது.