வயலில் நடக்கும் அறுவடையை
மேற்பார்வையிடவென
தொற்றிக்கொண்டு கிளம்பினாள் பேத்தியும்
கேள்விகளும் பதில்களுமாய்
வழிப்பாதையை நிரப்பிக்கொண்டே சென்றாலும்
அறுவடை என்பது ஒரு வடையல்ல என்பது
சற்று ஏமாற்றத்தையே கொடுத்தது அவளுக்கு
அடிவயிற்றிலிருந்து ஓங்காரமிட்டுக்கொண்டிருந்த
அந்த இயந்திரம்
பயிரைத்தின்று விட்டு
நெல்மணிகளையும் வைக்கோலையும்
தனித்தனியாய்த்துப்பியது பேராச்சரியம் அவளுக்கு
‘மாடு, யானைகளைக்கட்டிப் போரடிப்பார்களாமே
போரடித்தலென்றால் என்ன”
ஆதியோடந்தமாய் அவளுக்கு விளக்கிய நல்லாச்சி
மேலுமொரு தகவலையும் பரிமாறுகிறாள்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் எனும் சொல்
இதிலிருந்துதான் பிறந்ததென
‘சண்டு விடுதல்ன்னு கிராமத்தில் சொல்லுவோம்’
தனக்குள் முணுமுணுத்துக்கொள்கிறாள்
அக்கால நினைவுகளில் அமிழ்ந்தபடி
காற்றில்லா காலங்களில் முறங்களும்
நாகரீகம் பெருத்தபின் மின்விசிறிகளுமாய்
நான்கு பேர்களின் வேலையை ஒருவர் செய்வதென
மனித உழைப்பைப் படிப்படியாக
இயந்திரம் விழுங்கியதை
பேத்திக்குச் சொல்லிப் பெருமூச்செறிகிறாள்
தற்போது இவ்வியந்திரம்
எத்தனை வாழ்வாதாரங்களைக்
காவு கொண்டிருக்கிறதோ வினவுகிறாள் பேத்தி
நாற்பதோ நானூறோ
விவசாயியின் சத்துக்குட்பட்டது அக்கணக்கு
எடக்குப்பேச்சும் தெம்மாங்குமாய்
மணத்துக்கிடந்த களத்து மேட்டில்
ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது இயந்திரம்
நெல்மணிகளைத் தின்னவரும் குருவிகளை விரட்டியபடி.
டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.
No comments:
Post a Comment