Pages

Monday, December 29, 2025

நல்லாச்சி


கண்புரை ஏற்பட்டிருக்கிறதாம் நல்லாச்சிக்கு
அறுவை சிகிச்சைக்குப் பயப்படுகிறாள் அவள்
தைரியம் சொல்பவர் சிலர்
அதன் பெயரால் 
அதைரியப்படுத்துபவர் இன்னும் சிலர்

தொடச்சுப்போட்ட டியூப்லைட் மாதிரி
பளீர்ன்னு தெரியும் ஒலகம்
அழகுபோல சீரியல் பாக்கலாம்
எனத்தெம்பூட்டுகிறாள்
சிகிச்சையால் பலன் பெற்ற செல்லாச்சி
நப்பாசையால் சம்மதிக்கிறாள் நல்லாச்சி
முற்றத்து வெயில் முகத்தில் படாது
வெக்கை அணுகாது 
அருகிலிருந்து பேத்தி பேச்சுத்துணையாக
அந்தப்புரத்து ராணி போல் உணர்கிறாள் அவள்

எனினும்
தன்னைப்போல் தாத்தாவும்
கண்ணாடி அணியும் ரகசியம் புரிந்த தினத்தில்
திக்குமுக்காடிப்போனாள் அவள்
தன்னைத்தானே
ஆண் காந்தாரி என வர்ணித்துக்கொண்ட தாத்தா
உயர்தர ரேபானுடன் உல்லாசமாகத் திரிவதில்
கடுப்பிலிருக்கும் அவளிடம் நெருங்கி விடாதீர்கள்
சுட்டெரித்து விடுவாள்
புரையே ஏற்படாத நெற்றிக்கண்ணால்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

No comments: