(இணையத்தில் சுட்ட படம்)
கயிற்று வளையத்துள்
அடைபட்டிருந்த
பெட்டிகளெல்லாம்
அலுத்துக்கொண்டனர்,
ரயில் மெதுவாகச்செல்வதாக..
குதித்துக் கும்மாளமிட்டுச்
சூறாவளியாய்க்
கிளம்பிய ரயில் பெட்டிகள்
ஒன்றுக்கொன்று
இடித்துத் தள்ளியதில்
தடம்புரண்டோடிய
உற்சாக ஊற்று
சற்றுச்சுணங்கிற்று
அவ்வப்போது.
பிள்ளையார் கோவில்
நிறுத்தம்
இந்நேரம்
தாண்டப்பட்டிருக்க
வேண்டுமென்ற
மூன்றாவது பெட்டி
காளியப்பனை
ஆமோதித்தாள்
ஐந்தாவது பெட்டியான
வேலம்மாள்.
“வெரசாத்தான்
போயேண்டா”
விரட்டிய குரலுக்குத்தெரியாது,
ரயிலோட்டுனருக்கு
அன்றுதான்
காலில் கருவை
முள் தைத்ததென்பது.
அலுத்துப்போன
கடைசிப்பெட்டி
சட்டென்று திரும்பிக்கொண்டு
இஞ்சினாகியதில்
வேகம் பிடித்த
ரயிலில்
இழுபட்டு அலைக்கழிந்து
வந்தது
முன்னாள் இஞ்சின்
வலியில்
அலறிக்கொண்டு..டிஸ்கி: வெளியிட்ட நவீன விருட்சத்திற்கு நன்றி.
