Pages

Wednesday, August 18, 2021

நல்லாச்சி - 13

முல்லை மருதாணி நெல்லியெனப்
பலவுண்டு நல்லாச்சித் தோட்டத்தில்
காடாய் மண்டிய கனகாம்பரங்களுக்கும்
ஊடே பூத்திருக்கும்
டிசம்பர்பூக்களுக்குமிடையே
ஒட்டில் புட்டவித்தாற்போல்
தென்னையும் வாழையுமுண்டெனினும்
பேத்தி காவலிருப்பதென்னவோ
கொடுக்காப்புளி மரத்துக்குத்தான்
பச்சையும் நீலமும் பாரித்த காய்கள்
குங்குமத்தில் குளிக்கும்வரை
அவள்
பார்த்து ரசிக்க கணங்களுண்டு
கைமுறுக்கு அவிழ்ந்தாற்போல்
சுழன்றிறங்கும் அவற்றின் வயிற்றில்
கருமுத்து விளைந்தபோது
அம்மரம் 
ஒரு சரணாலயத்தையொத்திருந்தது
உச்சி நோக்கி நீண்டதொரு கிளையில்
கூட்டையும் இரு நீலமுட்டைகளையும்
கண்டதினத்திலிருந்து
அவற்றுக்கும் காவலானாள் பேத்தி
நல்லாச்சி கூட
அங்கே அனுமதியற்ற எதிரியே.

0 comments: