Pages

Tuesday, December 7, 2021

நினைவுள்ள வரை..


நினைவிலும் கனவிலும் அங்குசத்தைக் கொண்டுள்ள
ஒரு யானையை
அனிச்சைச்செயலாய் துதிக்கையுயர்த்தி
ஆசியளித்தும்
பாகனிடம் சில்லறைகளை
பிறழாதொப்படைத்தும்
கடனேயென வலம் வரும் அதை
அதற்கே உணர்த்துவதற்கென
ஏதும் செய்ய வேண்டியதில்லை
எங்கோ ஓர் ந்யூரான் முடிச்சின்
பாற்பட்டிருக்கும் விதைக்கு
சற்றே நீர் வார்க்கலாம்
மெல்ல நீளத்தொடங்கும் கானகத்தைப்
பற்றிக்கொண்டு
மத்தகம் குலுக்கி அது கிளம்பும் பொழுதில்
கால்களில் அரைபடா வண்ணம்
சற்றே விலகுவோமாக.

0 comments: