நல்லாச்சி உறங்குகிறாள்
சமையலறைப் பாத்திரங்கள் ஓசையின்றி
சைகையில் பேசிக்கொண்டிருக்க
தாழ்வாரம் வரை வந்து
தயங்கி தவிப்போடு அமர்ந்திருக்கும்
வெயிலின் தங்க நிறம்
படிகளில் தேன்துளிகளாய்த் தேங்குகிறது
பகலெல்லாம் ஓயாமல் உழைத்த களைப்பில்
பாயில் சாய்ந்திருக்கிறாள் நல்லாச்சி
இறகுகளை மெல்ல விரித்த தென்றல்
இதமாய் விசிறுகிறது அவளுக்கு
காற்றில் கலைந்த நிழல்கள்
பூனைக்குட்டியாய் அவள் காலடியில் முடங்கியிருக்க
முற்றத்தில் விளையாடும் பேத்தி
எட்டிப்பார்த்துக்கொள்கிறாள் அவ்வப்போது
அவளுக்கான கதைகள்தான்
இப்போது
நல்லாச்சியின் கனவுகளில் கருக்கொண்டிருக்கின்றன
அகில உலகமும் தன் இயக்கம் மறந்து நிற்க
காலமும் வெயிலும் வாசற்படியில் தவம் கிடக்கின்றன
சூரியனின் கதிர்களை அணைத்துக்கொண்டு
நல்லாச்சி உறங்குகிறாள்
பேத்தியும் காத்துக்கொண்டிருக்கிறாள்
அண்ணன் மீதான பஞ்சாயத்துக்கும்
கதைகளுக்குமாக
டிஸ்கி: கவிதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

No comments:
Post a Comment