Pages

Thursday, January 24, 2013

தொலைந்த நிழல்..(நவீன விருட்சத்தில் வெளியானது)

மதிய வெய்யில் உறங்கிக்கொண்டிருந்த வீதிகளில்
தேடலுடன் நகர்ந்து கொண்டிருந்தது அந்த நிழல்.
பூவரச மரத்தின் கீழ் துயின்ற
பூச்சருகுகளின்
உறக்கம் கலைக்காமல்
வார்த்தைக்குள் வராத சங்கீதத்தை
வாய்க்குள் மென்று கொண்டே
தான் தொலைந்த இடத்தைத்
தேடிக்கொண்டிருந்தது.

கலகலப்புகளிலும்
சின்னக்கொலுசுகளின் கிணுகிணுப்புகளிலும்
ஆலமர ஊஞ்சல்களிலும்
தன்னைத்தேடிச் சலித்த அது
ஜவ்வு மிட்டாய்க்காரனின் பின்னே
போய்க்கொண்டிருந்தது
தானும் கைதட்டிக்கொண்டு.

பல்லாயிரம் வாசனைகளுக்கிடையே
மிதந்து வந்த தன்னுடைய வாசனை
கால்களைக்கட்டியிழுக்க
தொலைந்த இடம் சேர்ந்த மகிழ்வுடன்
ஓடிச்சென்று விரல் பற்றிக்கொண்டு
பாண்டியாடத்தொடங்கியது
பாவாடை பறக்கப் பறந்து கொண்டிருந்த சிறுமியுடன்.

டிஸ்கி: நவீன விருட்சத்திற்கு நன்றி :-)

6 comments:

Yaathoramani.blogspot.com said...

அந்தச் சூழல் உணர்வுடன் நிழற்படமாய் அப்படியே
மனதிற்குள் பதிவானது
மனம் கவர்ந்த அருமையான கவிதை
தொடர வாழ்துக்கள்

ராமலக்ஷ்மி said...

அழகான கவிதை சாந்தி. இரசித்தேன். நவீன விருட்ச வெளியீட்டுக்கு வாழ்த்துகளும்.

பால கணேஷ் said...

எத்தனை அழகான கற்பனை! எவ்வளவு அருமையான வரிகள்! மிகமிக ரசித்தேன் சாரல் மேடம்! இன்னும் இதுபோல் நிறையப் படைப்புகள் தர இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

மிக்க நன்றி வாசிச்சதுக்கு :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலக்ஷ்மி,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கணேஷ்ஜி,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி :-)