Pages

Sunday, January 19, 2014

உயிர்ப்பித்தல்.. (நவீன விருட்சத்தில் வெளியானது)

விளைநிலங்களிலும்
வளர்ந்து நிற்கும் கான்கிரீட் காடுகளில்
மொட்டைத்த(ரை)லையில்
கொஞ்சம்
பூச்செடிகளுடன் குறுமரங்களையும்
சூடிக்கொண்டிருக்கும்
கட்டிடங்களைக் கண்ணுறும்போது மட்டும்
ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது
எப்பொழுதோ கிரயம் செய்து கொடுத்துவிட்ட
மாந்தோப்பும் மல்லிகைத்தோட்டமும்.

சிந்திச்சிதறிக்கிடக்கும் சூரியச்சில்லறைகளில்
புரண்டெழுந்த அணிற்பிள்ளைகளுடனும்
பொந்துகளை ஆக்கிரமித்திருந்த கிளிகளுடனும்
பகிர்ந்துண்ட தித்திப்பு
இன்னும் ஒட்டிக்கொண்டுதானிருக்கிறது அடிநாக்கில்.

“செவ்வகப்பெட்டியினுள் அடைபட்டிருப்பது
என் தோப்புக்கிளியிலொன்றாக இருக்குமோ”
என்றெழும் எண்ணத்தைக் கடந்து செல்ல முயன்று
தோற்றுப் போகும் ஒவ்வொரு முறையும்.
விசும்பியழும் மனதைச் சமாதானப்படுத்த
தொட்டி ரோஜாவும், க்ரோட்டன்ஸுமாய்
வீராவேசத்துடன் உயிர்த்தெழுகிறான்
மனதுள் உறங்கும் விவசாயி.

பி.கு: கவிதையை வெளியிட்ட நவீன விருட்சம் இதழுக்கு நன்றி.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வேதனை தரும் நினைவு தான்...

கீதமஞ்சரி said...

ஏக்கத்தை வெளிப்படுத்தும் வரிகள். கூண்டுக்குள் அடைபட்ட கிளி என் தோப்புக்கிளியோ என்ற வரிகள் மனம் நெகிழ்த்துகின்றன. அபாரம் சாந்தி. கடைசி வரியில் விவசாயிக்கு பதில் தோட்டக்காரன் என்றிருந்தால் இன்னும் பொருத்தமாயிருக்குமோ?

ஸ்ரீராம். said...


நகர சாதனை. நரக வேதனை!

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான கவிதை.

/சிந்திச்சிதறிக்கிடக்கும் சூரியச்சில்லறைகளில்
புரண்டெழுந்த அணிற்பிள்ளைகளுடனும்/

அழகான வரிகள்.

பால கணேஷ் said...

கிரயம் செய்து கொடுத்த மாந்தோப்பின் நினைவும், அணிலுடன் கழித்த பொழுதுமாக கவிதை(கள்) மனதில் ஒட்டிக் கொண்டன!

திண்டுக்கல் தனபாலன் said...

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...