Pages

Thursday, December 11, 2014

பச்சை வெயில்..

மலைகள் வரையப்படாத குழந்தைகள் ஓவியத்தில்
உதிக்க இடம் இல்லாமல்
அலைந்து கொண்டிருந்தான் சூரியன்
வெட்டப்பட்ட மரங்களின் பின்னே
சிதைக்கப்பட்ட மலையும்
அணிவகுத்துச் சென்றுவிட்டபின்
ஓவியத்தில் மட்டும்
சிறிதுகாலம் நினைவு கூரப்பட்ட அந்த மலை
இப்போது குழந்தைகளின் கற்பனையிலிருந்தும்
கரைந்து விட்டிருந்தது
அனாதரவாய் அலைந்து கொண்டிருந்த சூரியன்
இப்போது
கட்டடங்களின் பின்னிருந்து
உதிக்கப்பழகியிருந்தான்
மலையும் மரங்களுமில்லாப் பாழ்வெளியில்
பொழிந்த பச்சைவெயிலைக் குடித்து
பசியாற ஆரம்பித்தன உயிர்கள்
திசைக்கொன்றாய் நெளிய ஆரம்பித்திருந்தன  நட்சத்திரங்கள்
தீப்பிடித்திருந்த இன்னொரு மலையில்..

வால்: கவிதையை வெளியிட்ட சொல்வனம் இதழுக்கு நன்றி.

3 comments:

ஸ்ரீராம். said...

அருமை.

ராமலக்ஷ்மி said...

/கட்டடங்களின் பின்னிருந்து உதிக்கப்பழகியிருந்தான் மலையும் மரங்களுமில்லாப் பாழ்வெளியில் பொழிந்த பச்சைவெயிலைக் குடித்து பசியாற ஆரம்பித்தன உயிர்கள்/

நெஞ்சைச் சுடும் நிதர்சனத்தை அழகுறச் சொல்லியிருக்கிறீர்கள். சொல்வனம் வெளியீட்டுக்கு வாழ்த்துகள்!

உமா மோகன் said...

மிக அருமை சாந்தி வாழ்த்துகள்