Pages

Friday, April 20, 2012

பரஸ்பரம்..


அலிபாகிலிருந்து சுட்டுட்டு வந்தது..
மதுபானக் கடையினின்றும்
கசிந்த கோடி சூரிய ஒளிவெள்ளம்
குளிப்பாட்டி விட்டது
அருகிருக்கும் கோவிலையும்,
கொஞ்சம்..
போனால் போகிறதென்று.

இருண்டிருந்த கோயிலில்
நிவேதனத்துக்கும் வழியின்றி,
வெகு நாட்களாய்ச்
சோர்ந்தமர்ந்திருந்த கடவுள்,
நிதானம் தப்பிய நிலையிலேனும்
எவரேனும் வருவரோவென்று
விழி பூத்துக் காத்திருக்கிறார்
நம்பிக்கையுடன்..
பரஸ்பரம்
குறைகளைச் சொல்லியழ..


டிஸ்கி: வல்லமையில் எழுதுனதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்..

Saturday, March 31, 2012

வேரிலும் பூக்கலாம் வசந்தங்கள்..

படம் இணையத்தில் சுட்டது :-)
பெருவெளியெங்கும் பரந்து விரிந்திருந்த
கூட்டுக்குடும்ப விழுதுகள்
அற்றும் இற்றும் போன பின்
தனிமை கொன்று கொண்டிருக்கும்
அந்த ஒற்றை மரத்தில்
மிச்சமிருக்கிறது பசுமை.. இன்னும்,
மனித நேயத்தைப் போலவே.

சென்றவர்களெல்லாம்
மீண்டும் வரக்கூடுமென்ற
மீதமிருந்த நம்பிக்கையுடன்
ஆகாயத்துடன் உரையாடியபடி
மேகங்களை எதிர் நோக்கும் பொழுதுகளிலும்
ஊமையாகி விடாமல் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது
பறவைகளின் தாலாட்டுக்குரல்,
இன்னும் வெட்டப்படாத கிளைகளில்.

தனிமைக்கடத்தியாய்
ஏகாந்தம் கலைத்த தென்றலோ
வனமெங்கும் பூச்சொரிகிறது
ஏக்கம் சுமந்த வேர்களில்..
கானல் நீருக்காய்க் காத்திருந்த ஏக்கத்தில்
வேரடி வசந்தத்தை மறந்ததையெண்ணி
நெகிழ்ந்து சிரிக்கிறது
ஒற்றை மரம்.




டிஸ்கி: வல்லமையில் எழுதுனதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்.

Tuesday, March 20, 2012

பிழைத்துக் கிடக்கிறோம்..

என்னோட காமிராவுக்கு நன்றி சொல்லிக்கிறேன்
மனிதம் விற்று நடத்திய
சுயநல வியாபாரத்தில்
மிஞ்சியவை
மனிதனின் கணக்கில் லாபமாகவும்
இயற்கையின் கணக்கில் நட்டமாகவும்
வரவு வைக்கப்பட்டு விட.

கதிர்வீச்சு அழித்திட்ட
எங்கள் குழந்தைகளின் நினைவுகளைச்
சுமந்து கொண்டு..
சோலைகளிலும் வீட்டு முற்றங்களிலும்
விட்டு விடுதலையாய்த்திரிந்த
நாட்களை அசை போட்டபடி
அலைந்து திரிகின்றோம் அங்குமிங்கும்
பகடைகளாய்,
நீங்கள் ஆடும் சதுரங்கத்தில்..

சொந்த மண்ணிலேயே அகதிகளான
எங்கள் அபயக்குரல்கள்
எதிரொலிக்க வழியின்றி
என் அலகினுள்ளேயே
உங்கள் செவிகளை எட்டாவண்ணம்.
உறைந்து போய் விட

எங்களுக்கான வாழ்வாதாரங்கள்
கலைக்கப்பட்டு விட்ட பின்னும்
பிழைத்துக் கிடக்கிறோம்
ஒரு பிடி உணவிலும் ஒரு துளித் தண்ணீரிலும்
பச்சையம் மறந்த
இரும்புக்கிளைகளிலுமாக..

டிஸ்கி: குருவிகள் தினத்திற்காக வல்லமையில் எழுதுனதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்.


Thursday, February 2, 2012

வாசனையாய் ஒரு வானவில்..


படம் எடுத்த என்னோட காமிராவுக்கு நன்றி :-)
உதிரா இலைகளுடனும் அசையா மரங்களுடனும்
தானும் சோகத்தில் கலந்து கொண்ட
முதிராப் பூக்களை
நலம் விசாரிக்க வந்த பட்டாம்பூச்சி
வண்ணங்களையெல்லாம் உதிர்த்து நின்றது
குழந்தைகள் விளையாடாதிருந்த
பூங்காவில்..

சிறு நடை போட்டு வந்த
பிஞ்சுக்கூட்டத்தின்
விரல் பிடித்து வந்த தென்றல்,
கூத்தாடிக் கூத்தாடி உதிர்த்த இலைகளில்
ஒட்டிக் கொண்ட உற்சாக வர்ணங்களில்
புரண்டெழுந்த பூக்களைத்
தூரிகையாக்கித்
தீற்றிப் போகிறது வானவில்லை
பட்டாம்பூச்சியின் இறகுகளில்.

பிரபஞ்சமெங்கும் குளித்தெழுகிறது
வானவில்லின் நறுமணத்தில்.

டிஸ்கி: வல்லமையில் எழுதுனதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன் :-)


Monday, January 9, 2012

விடுதலையைச் சுவாசித்தபடி..


படம் கொடுத்த இணையத்துக்கு நன்றி..
என் ஒற்றைச் சொல்லொன்று
உரசிப் பார்த்ததால்
கொப்பளித்துத் துப்பிய
உன் ஆழ்மனக் கசடுகளையெல்லாம்
இதழோரம் கசியவிட்ட
தேய்பிறைப் புன்னகை மூலம்;
கழுவிச் சுத்தப் படுத்த முயன்று,
இன்னும் அழுக்காகி நிற்கிறாய்.
மதர்ப்புடன் விளையாடிக் கொண்டிருக்கும்
உன் பேதமை எழுப்பிய
அவநம்பிக்கை அலைகளில்
கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கலந்து
காணாமலே போய்க்கொண்டிருக்கிறாய் நீ
ஆட்டத்திலிருந்து
நீக்கி விட்டதை அறிந்து கொள்ளாமலேயே..
உன் மனப்பூட்டைத்
திறந்த சாவி
இப்போதேனும் கிடைத்ததேயென்ற
பூரிப்புடன்
அகல விரித்த என் கைகளில்
நிரம்பிய.. புத்தம் புதியதோர் உலகத்தின்
நிர்மலமான நீல வானில்
இறக்கையற்றுப் பறக்கிறோம்
நானும்
என் தக்கை மனசும்,
விடுதலையைச் சுவாசித்தபடி..


டிஸ்கி: வல்லமையில் எழுதியதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்..

Thursday, December 15, 2011

வீடென்பது...


(படம் பிடிச்ச என்னோட காமிராவுக்கு நன்றி :-))
அவனும் அவளுமான சிற்றோடைகள்
கை கோர்த்து நடந்த
பாதச் சுவடுகள் பற்றி நடந்த சிறு நதிகள்
சங்கமமாயின வீடெனும் கடலில்..
வீடெனும் சொல்
திறந்து விட்டு விட்ட
நினைவுப் பேழையினுள் அமிழ்ந்து கிடந்த
ஞாபகப்பூச்சிகளின் சிறகடிப்பினூடே,
கீற்றுத்துண்டாய் வெட்டி மறைகிறது
கம்பிகளினூடே வெயிலில்
பிடிவாதமாய் நனையும் மருதாணிப்பூக்கள்
வாசலில் வரைந்த வாசனைக்கோலம்..
பூட்டப் பட்டிருக்கும் கதவுகளுக்குப் பின்னே
ஒளிந்து நிற்கும் ஞாபகங்கள்
கைப்பிடித்து நலம் விசாரித்துச் செல்கின்றன
இப்போதாவது வந்தாயாவென..
தனக்கென்றதோர் கூடாயும்
அன்னியோன்னியமாயும் இருந்து வந்து,
அடுத்த தலைமுறையின் முடி சூட்டலுக்குப் பின்
உரித்தெறியப்பட்ட பாம்புச் சட்டையாய்
வீசப்பட்ட பின்னர்
அன்னியப் பட்டும் நிற்கிறது
வீடென்பது சிலருக்கு.

டிஸ்கி: வல்லமையில் எழுதினதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன் :-)

Wednesday, November 23, 2011

எவரேனும்..


விருந்தினர் வரவைக்
கரைந்தறிவிக்கும் காக்கை
தானே ஒரு
விருந்தினரானது;
அப்பாவின் திதியன்று.. 
அவரே வந்ததாய் எண்ணி
பரிமாறிக் கொண்டிருக்கிறாள் அம்மா,
அப்பாவுக்குப் பிடித்ததையெல்லாம்..
தலை சாய்த்து உண்ணும்
காகத்தின் பார்வை
மின்னலாய்ச் சொடுக்கிப் போகிறது
மின்கம்பத்தில் முன் தினம்
கருகி வீழ்ந்த காகத்தின் நினைவையும்
கருகாத கேள்வியொன்றையும்.. 
பகிர்ந்துண்ணவும் பாசம் கொள்ளவும் மட்டுமன்றி,
பிண்டமிடவும் பித்ருவாய் வரவும்
அவற்றின் உலகிலும்
எவரேனும் இருக்கக் கூடுமோ?

டிஸ்கி: வல்லமையில் எழுதியதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன் :-)